லீலை கண்ணன் கதைகள்.....23

லீலை கண்ணன் கதைகள்.....23…பழ வியாபாரி...
சென்ற பதிவில் இரட்டை மரங்களாக இருந்த இரண்டு தேவர்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். அதன் தொடர்ச்சி இந்த பதிவில் பார்ப்போம். ஒரு நாள் வீட்டு முற்றத்தில், கிருஷ்ணன் பலராமனுடனும் மற்றவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில் பழம் விற்கும் ஒரு பெண், "பழம்!! பழம்!!" என்று கூறிக் கொண்டு செல்வது கேட்டது. பழங்கள் வாங்க வேண்டுமென்று கிருஷ்ணன் விரும்பினான். ஆனால் அவன் கையில் காசு இல்லை. அப்பொழுது வீட்டின் ஒரு பக்கத்தில் தானியங்கள் நிறையக் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் கிருஷ்ணன் பார்த்தான். தன் பிஞ்சுக் கைகளினால் அவன் கைநிறையத் தானியங்களை எடுத்துக்கொண்டு தெருப்பக்கம் ஓடினான். போகும் வழியில் முக்கால்வாசித் தானியங்கள் சிதறிக் கீழே தரையில் விழுந்துவிட்டன.
பழம் விற்பவளைப் பார்த்து, கிருஷ்ணன் "இந்தத் தானியங்களை எடுத்துக் கொண்டு எனக்குப் பழம் கொடு" என்றான்.
குழந்தையின் அழகையும், அவனுடைய வசீகர முகத்தையும் கண்டு மயங்கினாள். கிருஷ்ணனின் கால் தண்டைமநிகளின் ஓசை அவளுக்கு இனிய கீதம் போலக் காதில் ஒலித்தது. அந்த அனுபவத்தை அவள் என்றும் மறக்கமாட்டாள்.
அவள் கிருஷ்ணனை பார்த்து, "குழந்தாய்! நீ தானியங்கள் கொடுத்துப் பழங்கள் வாங்க வந்திருக்கிறாய். ஆனால் எல்லாத் தானியங்களும் வழியில் சிதறி விழுந்துவிட்டன. இருந்தாலும் உனக்கு எத்தனை பழங்கள் தேவையோ அத்தனை எடுத்துக்கொள்" என்று சொன்னாள்!
கிருஷ்ணன் தன் கையிலிருந்த சிறிது தானியத்தை அவள் கூடைக்குள் போட்ட பிறகு, அவன் இரு கைகள் நிறைய அவள் பழங்கள் கொடுத்தாள். பிறகு அவள் வீடு திரும்பி, கூடையை பார்த்தால், அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. கூடையில் இருந்த அத்தனை தானியங்களும் ரத்தினக் கற்களாகவும், தங்கமாகவும், மரகதமாகவும் மாறி இருந்தன!
தமக்கு அன்புடனும் பக்தியுடனும் அளிக்கப்படும் எதுவும் தம் பக்தர்களுக்கு ஆயிரம் மடங்காகப் பெருக்கித் திரும்பக் கிடைக்கும் என்பதை இந்த அற்புதத்தின் மூலம் கிருஷ்ணன் நிரூபித்திவிட்டான்.
மீண்டும் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்...

Comments