அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை

அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை இது:–

போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கொடை வள்ளல் கர்ண மாமன்னன். தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள் என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஒரே புன் சிரிப்பு! கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா! என்று கெஞ்சுகிறான்.

கண்ணன் உடனே, இதோ தண்ணீர் என்று ஊற்றுகிறார். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. கண்ணா, இது என்ன வேலை? சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது என்று கதறுகிறான்.

கிருஷ்ணருக்குமே புரியவில்லை. ஒரு நொடியில் ஞான த்ருஷ்டியில் பார்த்துவிட்டு மீண்டும் புன்சிரிப்பை நெளியவிடுகிறார். கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய். அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்ன தானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பு என்றார்.

இதைக் கேட்ட கர்ணன் நாணிக்கோணி தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. கன்னனுக்கும் கண்ணனுக்கும் – இருவருக்கும் — ஆனந்தம். அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி. சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!!

Comments