இந்திரப் பிரஸ்தத்தில் கிருஷ்ணன்
அரக்கு மாளிகையில் அகப்பட்டு பாண்டவர்கள் இறந்ததாக எண்ணினர். ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பதனால் அவர்களுடைய சேமநலன் தெரிந்து வர கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் சென்றார். பகவானாகிய கிருஷ்ணனைக் குந்தியும், பாண்டவர்களும் வரவேற்று, உபசரித்து பூஜை செய்து ÷க்ஷமம் விசாரித்தனர். அப்போது திரவுபதி கிருஷ்ணனை வணங்கினார். குந்தி தேவி தன் கஷ்டங்களைக் கூறி வருந்தினாள். மேலும் கிருஷ்ணன் வந்துவிட்டதால் இனி கவலை இல்லை என்று அன்புடன் கூறினாள். தருமபுத்திரர் கிருஷ்ணனை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டிட கிருஷ்ணனும் சில மாதங்கள் அங்கு தங்கினார்.
காளிந்தியை மணத்தல்
ஒருநாள் அருச்சுனனும், கிருஷ்ணனும் வனத்தில் வேட்டையாடி களைத்து யமுனை ஆற்றங்கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காளிந்தி என்ற அழகிய பெண் வந்தாள். அவளைப் பற்றி விசாரிக்க அவள் தன் பெயரைக் கூறி யமுனையில் தன் மாளிகையில் வாழ்வதாகவும் பகவான் நாராயணனைத் தன் பதியாக அடைய தவம் இருப்பதாகவும் அவரை அடையும் வரை அங்கேயே இருப்பதாகவும் கூறினாள். இந்திரப் பிரஸ்தத்தில் பகவான் விஸ்வகர்மாவைக் கொண்டு ஓரழகிய நகரத்தை ஏற்படுத்திக் கொண்டு பாண்டவர்களுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தார். அருச்சுனனுக்கு சாரதியாக இருந்து பல அதிசயங்களை நிகழ்த்தினார்.
காண்டவவனம் எதிர்த்தல்
காண்டவ வனத்தை அக்கினிக்கு உணவாக அளிக்க, கிருஷ்ணன் அருச்சனனுக்குக் காண்டீபம் என்ற வில்லையும், அக்ஷயமான அம்புராத் தூணிரத்தையும், உறுதியான கவசத்தையும், ஒரு ரதத்தையும் அழகிய வெள்ளைக் குதிரையையும் பரிசாக அளித்தார். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணன் காளிந்தியுடன் துவாரகையை அடைந்து அவளை மணந்து கொண்டார்.
பல திருமணங்கள்
அவந்தி நாட்டரசன் சகோதரி மித்திர விந்தையை மணந்தார். கோசல மன்னன் நக்னஜித் தன்னிடமுள்ள ஏழு காளைகளை அடக்குபவனுக்குத் தன் மகளை மணமுடிப்பதாகக் கூறியுள்ளதால், அந்த ஏழு முரட்டுக்காளைகளையும் கிருஷ்ணன் அடக்கிட அவன் குமாரி சத்யாவைக் கிருஷ்ணனுக்கு விவாகம் செய்வித்தான். இவளே நப்பின்னை ஆவாள். பின்னர் அத்தை சுருத கீர்த்தியின் மகள் பத்திராவையும், மந்திர தேசத்தரசன் மகள் லக்ஷ்மணாவையும் ஆக எட்டு பட்ட மகிஷிகளுடன் வாழ்ந்து வந்தார் கிருஷ்ணன். மற்றும் இஷ்டப்படி உருவம் கொள்ளும் மத்ரராஜனுடைய மகள் சுசீலை என்பவளையும் மணந்தார்.
Comments