🎉 போகிப்பண்டிகை!
🎉போகிப்பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப்பண்டிகை என்றாகி விட்டது.
🎉வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது.
🎉பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அதுமட்டுமல்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுப்படுத்துவது தமிழர் பண்பாடு.
🎉இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுவிடும் நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.
காப்பு கட்டுதல் :
🎉போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதன் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தமாகிய வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காகவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.
🎉மா இலை காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும். சீரான சிறுநீர்போக்கு ஏற்படுத்தும். விஷ முறிவுக்கு உதவும். வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை தடுக்கும். ஆவாரம்பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும். தும்பை செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.
இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :
🎉மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாக திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு.
🎉மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.
பழைய பொருட்களை எரித்தல் :
🎉பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துவார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். மனதில் இருக்கும் துயரங்களை அழிப்பதால் இப்பண்டிகையை போக்கி என்றனர். போகியன்று அந்த பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகும்.
Comments